search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளை கொன்று தொழிலாளி தற்கொலை"

    திண்டுக்கல் அருகே மகளை கொன்ற தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது32). இவரது மனைவி முனீஸ்வரி (27). இவர்களுக்கு சந்தோஷ் (7) என்ற மகனும், ஹர்சவர்த்தினி (5) என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பெரியவர்கள் தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். இருந்தபோதும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே போனது.

    கணவன்-மனைவி 2 பேரும் மில் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை முனீஸ்வரியின் தாய் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வந்த தங்கமணி மற்றும் முனீஸ்வரி ஹர்சவர்த்தினியை மட்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    வீட்டில் நுழைந்ததும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தங்கமணி அருகில் இருந்த சுத்தியலை எடுத்து முனீஸ்வரியின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து போனார். மனைவி இறந்து விட்டதாக நினைத்த தங்கமணி அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    குழந்தையை விட்டு சென்றால் கஷ்டப்படும் என எண்ணிய தங்கமணி மகள் என்றும் பாராமல் ஹர்சவர்த்தினியின் கழுத்தை அறுத்தார். இதில் அந்த குழந்தை துடிதுடித்து இறந்தது.

    பின்னர் தூக்குபோட்டு தங்கமணி தற்கொலை செய்து கொண்டார். முனீஸ்வரியின் முனங்கல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்கள் முனீஸ்வரியை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனீஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தங்கமணி மற்றும் ஹர்சவர்த்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் மகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×